Saturday, September 15, 2012

நியாயவான்களே...!

இறைத்தூதர் முஹம்மது நபி (அவர்களின் மீது இறையருள் பொழிவதாக) அவர்களை இழிவு படுத்தும் வகையில் அமெரிக்க வாழ் யூதன் ஒருவன் Innocent Muslims என்ற பெயரில் எடுத்துள்ள படத்தின் டிரைலர் காட்சிகள் youtube சமூக தளத்தில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து உலகெங்கிலுமுள்ள இஸ்லாமிய சமூகம் உணர்ச்சிப் பிழம்பாய் வீதியில் இறங்கி, இந்த திரைப்படத்தை எடுத்த அந்த நபரை கண்டித்தும்,இத்தகைய துவேஷங்களுக்கு துணை போகும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி'யை கண்டித்தும் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய நம்பிக்கைகளையும்,இறைத் தூதர் முஹம்மது நபி (அவர்களின் மீது இறையருள் பொழிவதாக) அவர்களையும் இழிவு படுத்தும் போக்கு இன்று நேற்றல்ல.. காலங்காலமாகவே நடைபெற்று வருகிறது.உலக மக்களில் பெரும்பாலானோர் ஏதாவது ஒரு மதத்தை தமது வாழ்வியல் நெறியாக பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஒரு மத நம்பிக்கையினை மற்றொரு மதத்தவர் அவமதிப்பது பதிலுக்கு அவர்கள் இவர்களை இழிவு படுத்துவது போன்ற நிகழ்வுகள் உலகின் ஏதாவது ஒரு மூலையில் நடைபெற்றுக் கொண்டேதானிருக்கின்றன.ஆயினும் இத்தகைய அக்கப்போர்களுக்கு இஸ்லாத்தில் கிஞ்சிற்றும் இடமில்லை.

இது பற்றி குர்ஆன் தெளிவாகவே கருத்துரைக்கிறது...
(முஸ்லிம்களே) அவர்கள் ஏக இறைவனை விடுத்து யாரிடம் பிரார்த்தனை புரிகிறார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள். (குர்ஆன் 6:108) 

இத்தகைய அழகிய வழிகாட்டுதல்களை பின்பற்றுவதால் தான் இஸ்லாமியர்கள் மற்ற மத நம்பிக்கைகளையோ,அவர்களின் தெய்வங்களையோ விமர்சிப்பது கிடையாது.கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இத்தகைய அவதூறுகளுக்கு அரசாங்கங்கள் அங்கீகாரம் அளிக்குமானால் அதனை முஸ்லிம்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டிருக்கமாட்டார்கள்.

இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயம் வீதியில் இறங்கி போராடுவது இத்தகைய கட்டுப்பாடற்ற கருத்து சுதந்திரத்தை வழங்கி வரும் அமெரிக்க போன்ற அரசுகளுக்கு பாடம் புகட்டுவதற்காக தானே ஒழிய நபிகளாரை இழிவு படுத்திய யூதனின் மதத்தை கண்டிப்பதற்க்காகவோ அல்லது இழிவு படுத்துவதற்காகவோ அல்ல என்பதை நடுநிலையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

துவேஷத்துடன் முன்வைக்கப்படும் இத்தகைய விஷம கருத்துக்கள்,அறியாத மக்களுக்கு இஸ்லாத்தை பற்றியும்,நபிகளாரை பற்றியும் அறியத் தூண்டும் ஓர் உந்து சக்தியாக வடிவம் பெற்று வருகிறது என்பது சமீப காலங்களில் உலகம் கண்டு வரும் உண்மையாகும்.

Tuesday, September 11, 2012

உணவுகளை வீணடிக்காதீர்கள்....! (கவிதை)


கொடிய அணுஉலை வேண்டாம்...! (கவிதை)



சினிமாக் காரர்களே.... உங்களைத் தான்.....



சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.ஆனாலும் இந்த விவகாரம் கூடங்குளத்தை சுற்றி இருக்கும் ஐந்து கிராமங்களோடு மட்டும் சுருங்கிக் கிடக்கிறது.இந்த முடக்கத்திற்கு  பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.அவற்றில் முக்கியமான ஒரு காரணம் சினிமா.

 தமிழகத்தை பொறுத்த வரையில் சினிமாத்துறை மக்களோடு பின்னிப் பிணைந்த ஒன்றாக இருக்கிறது.சாதீயப் பெருமைகளையும் வர்ண பேதங்களையும் பற்றி பேசிய நமது சினிமாக் காரர்கள்,கூடங்குளம் அணுஉலை போன்ற மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை தங்களின் சினிமாக்களில் பேசத் தவறிவிட்டனர்.சினிமா நடிகர்களை நிஜ நாயகர்களாக கருதி அவர்களை கோட்டைக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இத்தகைய பிரச்சனைகளை சினிமா மொழியில் விளக்கினால் மட்டுமே நன்கு புரியும்.

 Dam 999 இந்த பெயரை தமிழகத்தை சேர்ந்தவர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.தென் தமிழகத்தின் விவசாய ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணையை உடைத்து தென் தமிழகத்தை  வறண்ட பாலைவனமாக மாற்ற மலையாள பாசிஸ்டுகள் மேற்கொண்ட சதிராட்டத்தின் உச்ச கட்டம் தான் இந்த Dam 999 என்ற திரைப்படம்.

 தமிழின எதிர்ப்பு என்ற ஒற்றை விஷ(ய)த்தை மட்டுமே மூலதனமாக்கி இந்த படம் எடுக்கப்பட்டது.இந்தப் படம் வெளியானதை தொடர்ந்து மலையாள ஊடகங்கள் இதற்க்கு விளம்பரம் தேடித்தருவதில் பெரும் பங்கு வகித்தன.அவர்கள் திட்டமிட்டபடி கேரளா முழுவதும் தமிழர்களுக்கெதிரான வெறுப்புணர்வினை இந்தப்படம் முறையாகவே கட்டமைத்தது.கேரளா எல்லையையும் தாண்டி,தேசிய (?) அளவிலும் இப்படம் பெருமளவில் விவாதிக்கப்பட்டது.

கோலிவுட் காரர்கள் கொஞ்ச நாளைக்கு "சதை வியாபாரம்"செய்யும் வேலையை நிறுத்தி விட்டு கூடங்குளம் அணுஉலையின் ஆபத்துக்களை விவரிக்கும் படங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் தயாரிக்கும் உருப்படியான வேலைகளை செய்யத் தொடங்குங்கள்.கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் என்பது அந்த ஊரை சுற்றியுள்ள சில கிராமங்களோடு முடிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல.. அது முழு தமிழகத்தை மட்டுமல்ல,முழு இந்தியாவையே உசுப்ப வேண்டிய ஒரு மாபெரும் உணர்ச்சிப் போராட்டமாகும்.


Sunday, September 2, 2012

நபிகளாரின் வரலாற்றை பேசும் உலக சாதனை புத்தகம்...

படிப்பறிவும் பகுத்தறிவும் இல்லாத காட்டுமிராண்டிகள் சமூகத்தில் பிறந்து,இறை தூது செய்தியின் வழியாக இவ்வுலகிற்கு நீதியையும் நெறியையும் போதித்த இறைத்தூதர் நபிகளார் (அல்லாஹ்வின் அருள் அவர்கள் மீது பொழியட்டுமாக) ஒரு வரலாற்று அதிசயமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இவர்களைப் போலவே இவர்களது வாழ்க்கை நெறியினை பேசும் ஒரு புத்தகமும் உலக அதிசயமாக பேசப்படுகிறது.

சவூதியை சேர்ந்த இஸ்லாமிய சட்ட வல்லுநர் டாக்டர் அப்துல்லாஹ் அப்துல் அஜீஸ் அல் முஸ்லிஹ் அவர்களால் இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை கொண்டிருப்பவர்களுக்காக தெளிவுகளை ஏற்படுத்தும் வகையில்,நபிகளாரின் வரலாற்றை தாங்கி   அரபி மொழியில் "இறைத்தூதர் முஹம்மது"என்று பெயரிடப்பட்டு ,புத்தகத்துக்கான வழக்கமான அம்சங்களுடன் (கையில் வைத்து படிக்கிறா மாதிரி ) வெளியிடப்பட்ட இந்த நூல்,துபையை சேர்ந்த மஷாஹாத் எனும் நிறுவனத்தின் முயற்சியால் 2012 ஆம் ஆண்டுக்கான கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.


கின்னஸ் உலக சாதனைக்காக சுமார் 1500 கிலோ எடையில் ஐந்து அடி நீளமும்,நான்கு அடி அகலமும் கொண்டு,420 பக்கங்களில் தோலில் அச்சிடப்பட்ட இந்த ராட்சத புத்தகம் "உலகிலேயே அதிக மிக நீளமான புத்தகம்"என்ற பெருமையை பெற்றிருக்கிறது.இந்த நூலின் மதிப்பு அமீரக திர்ஹம் 110 மில்லியன் ஆகும். 


அமீரகத்தின் துபையை தொடர்ந்து அல் அய்ன் போன்ற நகரங்களில்,மக்கள் ஒன்று கூடும் "ஷாப்பிங் மால்"களில் தற்பொழுது பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள இந்த "மெகா"புத்தகம்,தொடர்ந்து குவைத்,சவூதி அரேபியா மற்றும் முஸ்லிம் நாடுகளின் தலை நகரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.