Saturday, November 24, 2012

16-22 நவம்பர் 2012 தேதியிட்ட மக்கள் உரிமை இதழில் வெளியான எனது கடிதம்


நவம்பர் 09-15 தேதியிட்ட மக்கள் உரிமை இதழல் வெளியான 'மதரஸா கல்வி:தேவை மாற்றம்' என்ற தலைப்பிலான ஆய்வு கட்டுரை படித்தேன்.
ஜாமிஆ மன்பவுல் அன்வார் எனும் இஸ்லாமிய மதரஸா அமையப் பெற்ற லால்பேட்டைக்கு மிக நெருக்கமான ஒரு ஊரில்,மார்க்க கல்வி பயின்றவர்கள் நிறைந்துள்ள ஓர் குடும்பத்தில் பிறந்த ஒருவனாக நான் இக்கட்டுரை குறித்து சில கருத்துக்களை பரிமாறிக் கொள்ள விழைகிறேன்.

தங்களது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவாறு இன்றைய சமூகத்தில் ஆன்மீக வறுமை ஏற்பட்டுள்ளது என்பதும்,அதற்கு இஸ்லாமிய கல்வி மட்டுமே சரியானதொரு தீர்வாக அமையும் என்பது மறுக்க முடியா பேருண்மையாகும்.
கல்வி கற்றல் என்பது பணம் சம்பாதிப்பதற்கான குறுக்கு வழி என்ற ஒரு விஷமச் சிந்தனை இன்றைய முதலாளித்துவ சூழலில் விரும்பி விதைக்கப்பட்டுவிட்டது.இதன் விளைவாக மதரஸாக்களுக்கு சென்று மார்க்கத்தை பயில்வது பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.

அதே நேரம் நமது மதரஸாக்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட வேண்டிய கட்டாயம் இன்றைக்கு உருவாகி இருக்கிறது.
உலகின் ஏற்படும் அணைத்து பிரச்சனைகளுக்கும் இஸ்லாத்தில் மாத்திரமே தீர்வு இருப்பதாக மேடைகள் தோறும் நாம் முழங்கி வருகிறோம்.இத்தகைய இஸலாமிய தீர்வுகளை உலகோர்கு அழகிய முறையில் சொல்லிக் கொண்டிருக்கும் டாக்டர் ஜாகிர் நாயக் போன்றோர் எந்த மதரஸாக்களுக்கும் சென்று ஏழு வருடங்கள் கல்வி பயின்று மவ்லவி ஆலிம் என்பதாக பட்டம் பெற்றவர்கள் அல்லர் என்பது ஆச்சரியமான ஒர் விஷயமாகும்.
ஆனால் நம்மூர் மதரஸா கல்வி முறைமை அத்தகைய இஸ்லாமிய தீர்வுகளை சரிவர எடுத்து சொல்லும் ஆலிம்களை உருவாக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
அரபுலகில் பிரசித்தி பெற்று விளங்கும் எகிப்து அல் அஸ்ஹர் இஸ்லாமிய பல்கலைக் கழகம்,மதீனா பல்கலைக்கழகம் போன்றவற்றில் மார்கக் கல்வி கற்றவர்கள் இஸ்லாமிய கல்வித் துறையில் தனி முத்திரை பதித்து வருகின்றனர்.அத்தகைய கலாசாலைகளில் பின்பற்றப்படும் போதனை முறைகளை நமது மதரஸாக்களில் கொண்டு வர முயல வேண்டும்.
நமது மதரஸாக்களில் அரபி மொழிக்கு அடுத்த படியாக உர்து மொழிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.இஸ்லாம் உலகம் முழுமைக்குமான வாழ்க்கை நெறியாகும்.ஆகையால் சர்வதேச மொழியான ஆங்கிலம் மதரஸா பாடத்திட்டத்தில் கட்டாயம் இணைக்கப் படவேண்டும்.

நபிகளார் காலத்தில் வாழ்ந்த இறைமறுப்பாளர்களைக் காட்டிலும் இன்றைய யூதர்களால் இஸ்லாமும் நமது உயிரினும் மேலான நபிகளாரும் மிகத் தரக் குறைவாக விமர்சிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.இத்தீய சக்திகள் ஊடகங்களை தங்களது கரங்களில் ஆயுதமாக ஏந்தியுள்ளனர்.
முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பதைப் போல நாமும் ஊடகங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.நமது மதரஸாக்களில் ஊடக பயன்பாடு குறித்த கல்வி போதிக்கப்பட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்டவர்கள் இத்தகைய மாற்றங்களை விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்.முன்வருவார்களா..?

No comments:

Post a Comment